வெனிசுவேலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; பீதியில் உறைந்த மக்கள்
வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்நாட்டின் தலைநகர் கராகஸில் உள்ள கட்டிடங்களை குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் (Moron) பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கராகஸில் நிலநடுக்கத்தால் ஆடிய கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
இதேவேளை, அண்டை நாடான கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு சிலர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த ஒரு புகைப்படத்தில், கராகஸில் உள்ள ஒரு வங்கி என நம்பப்படும் கட்டிடம் இடிபாடுகளுடன் காணப்படுகிறது.