தடுப்பூசிக்காக கர்ப்பிணிகள் காத்திருப்பது குழந்தைக்கு ஆபத்து: மருத்துவர்கள் எச்சரிக்கை
கியூபெக்கில் கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசிக்காக காத்திருப்பதும், அல்லது தள்ளிப்போடுவதும் குழந்தைக்கு ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கியூபெக்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிவடைந்தே காணப்படுகிறது. ஆனால் இளைய சமூகத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
30 முதல் 39 வயதுடைய கியூபெக் மக்கள் 74% பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் 18 முதல் 29 வயதுடையவர்கள் 69% பேர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி கர்ப்பிணிகள் தங்கள் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளதுடன், பலர் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள தாமதப்படுத்துவதாகவும், சிலர் கர்ப்பமாக இருப்பதால் தற்போது தடுப்பூசி வேண்டாம் என மறுப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் விருப்பத்தை மதிப்பதாக கூறும் மருத்துவர்கள், ஆனால் விஞ்ஞானிகள் உறுதி அளித்த பின்னர், தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவிப்பது அவர்களின் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கர்ப்பிணிகள் புரிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய சூழலில் கர்ப்பிணிகள் தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவிப்பதால் நோய் தொற்றும் ஆபத்து அதிகம் எனவும், டெல்டா மாறுபாட்டின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கியூபெக்கில் ஏப்ரல் 28ல் இருந்தே கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தாயை மட்டுமல்ல, குழந்தையையும் அது பாதுகாக்கிறது,
கருப்பையில் தாயின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் குழந்தையும் பாதுகாக்கப்படுகிறது. மட்டுமின்றி பிறந்த பிறகும் முதல் ஆறு முதல் 12 மாதங்கள் வரை குழந்தை பாதுகாக்கப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து மிகுந்தவர்கள் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.