பிரான்ஸில் 20 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட விலை அதிகரிப்பு!
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்ஸில் தண்ணீர் போத்தல்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் அதிகரித்துவரும் பண வீக்கம் சாதாரணமாகக் கொள்முதல் செய்கின்ற நாளாந்தப் பொருள்கள் அனைத்தினது விலைகளிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் குடி தண்ணீர் போத்தல்களின் விலை கடந்த இருபது ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பல்பொருள் அங்காடிகளில்மிக அதிக எண்ணிக்கையில் விற்பனை யாகின்ற தண்ணீர் போத்தல் என்ற பெரு மைக்குரிய “கிறிஸ்டலின்” வகைகளில் 1.5 லீற்றர் தண்ணீர் அடங்கிய ஆறு போத்தல்கள் கொண்ட பொதிகள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளன.
அதேவேளை கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் விற்பனையாகிய இந்தப் போத்தல்களின் மொத்தத் தொகை 233 மில்லியன்கள் ஆகும். புதிய விலை அதிகரிப்பின் படி ஆறு பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட கிறிஸ்டலின் தண்ணீருக்கு இனி மேல் அதன் விலையில் பத்து வீதத்தை மேலதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
எரிபொருள் விலை அதிகரிப்புக் காரணமாகப் போத்தல்களுக்கான பிளாஸ்ரிக்கின் விலை உலக சந்தையில் 39 வீதத்தால் உயர்ந்துள்ளது. தண்ணீர்ப் போத்தல் விலை அதிகரிப்புக்கு இதுவே பிரதான காரணமாகும். அத்துடன் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதால் தண்ணீர் போத்தல் விநியோகச் செலவுகளும் உயர்ந்துள்ளன.
இதேவேளை, பிரான்ஸில் கடந்த மே மாதம் பணவீக்கம் 5,2 %வீதமாக அதிகரித் துள்ளது. இவ்வாறு பணவீக்கம் ஐந்து வீதத்தைத் தாண்டி அதிகரிப்பது 1985 ஆம் ஆண்டின் பின்னர் இப்போதுதான் முதல் முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.