தடைகளை தாண்டி பதவியை தக்கவைத்தார் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்
பிரிட்டனின் மிகவும் பரபரப்பான சூழ் நிலையில் நேற்று முன்னிரவு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 211பேர் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு (Boris Johnson) ஆதரவாக வாக்களித்து அவரது பதவியைப் பாதுகாத்துள்ளனர்.
(Boris Johnson) பதவியில் நீடிப்பதற்கு பழமைவாதக் கட்சியின் 359 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 180 உறுப்பினர்களது ஆதரவு மட்டுமே அவசியம் என்ற நிலையில் ஜோன்சனுக்கு 211 உறுப்பினர்களது ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உட்பட148 எம். பிக்கள் அவரது தலைமையை எதிர்த்து வாக்களித்திருப்பது கட்சிக்குள் பெரும் விரிசல்களைத் தோற்றுவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் குழு அறை ஒன்றில் நேற்று மாலை ஆறு மணி முதல் இந்த வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்படுவதற்கு சிறிது நேரம் முன்பாக அது பிரதமர் ஜோன்சனுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
கொரோனா பொது முடக்க காலப்பகுதியில் பிரதமரது நம்பர் 10 அலுவலகத்திலும் வெளியிலும் சுகாதார விதிகளை மீறி நடத்தப்பட்ட மது விருந்துகள் தொடர்பாக வெளியான விசாரணை அறிக்கையின் (Sue Gray’s report) தொடர்ச்சியாகவே பிரதமர் ஜோன்சன் (Boris Johnson) மீது இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சுகாதார விதி மீறல்களுக்காக ஏற்கனவே அவருக்கு அபராதத் தொகையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை பார்ட்டிகேற் ஊழல் (partygate scandal) என்று அழைக்கப்படுகின்ற இந்த மது விருந்து விவகாரம் ஜோன்சனின் (Boris Johnson) செல்வாக்கைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.