கண்ணீர் மழையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்று , அரச குடும்பத்தினரின் கண்ணீர் மழையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (வயது 99) கடந்த 9ஆம் திகதி வின்சர் கோட்டையில் காலமானார். இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நேற்றையதினம் வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.
வின்சர் கோட்டையில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. இளவரசர் பிலிப், தான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில், பிலிப்பின் உடல் தாங்கிய பேழை வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹரி மற்றும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை ராணி எலிசபெத் ஊர்வலத்தில் வராமல், நேரடியாக தேவாலயத்திற்கு காரில் வந்து சேர்ந்தார். இதேபோல் ஊர்வலத்தில் பங்கேற்காத அரச குடும்ப உறுப்பினர்களும் காரில் வந்தனர்.
தேவாலயத்தில் பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்ததும், இளவரசர் பிலிப்புக்கு அரசியிடம் இருந்த அசைக்கமுடியாத விசுவாசம், அவர் நாட்டுக்கு செய்த சேவை, அவரது தைரியம் போன்றவற்றை நினைவுகூர்ந்து வின்சரின் மதகுரு அஞ்சலி செலுத்தி நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது.
அதன்பின்னர் இளவரசர் பிலிப்பின் உடல், தேவாலயத்தின் அடியில் உள்ள கல்லறைப் பகுதியான ரோயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு மற்றும் ஊர்வலத்தில் ஆயுதப்படையினர் 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எனினும் , கொரோனா கட்டுப்பாடு காரணமாக புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் 30 பேர் மட்டும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இளவரசர் பிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் மற்றும் கிப்ரால்டர் உட்பட 9 இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ஒரு நிமிட தேசிய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய மௌன அஞ்சலியை பிரதிபலிக்கும் விதத்தில், ஹீத்ரூ விமான நிலையத்தில் ஆறு நிமிடங்களுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.
எந்த விமானமும் புறப்படவில்லை, எந்த விமானமும் தரையிறங்கவில்லை. மேலும், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை ஒட்டி, அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.