நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்: ஏற்பட்ட பதற்றம்!
சாலமன் தீவுகளில் போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு சாலமன் தீவின் பிரதமராக மானசேஹ் சோகவாரே (Manasseh Sogavare) கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் இவர், தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசாங்கத்தின் இந்த முடிவை நாட்டின் பல்வேறு மாகாண அரசுகள் ஏற்க மறுத்தன. இதை தொடர்ந்து, பிரதமர் மானசேஹ் சோகவாரேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதன்போது பொலிஸார் அவர்களை விரட்டியடிக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கும், அதன் அருகில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்துக்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.