லித்தியம்-அயன் பேட்டரிகளால் அதிகரிக்கும் தீ விபத்துகள்: எச்சரிக்கை!
கனடாவின் பல்வேறு நகரங்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தீயணைப்புத் துறையினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆல்பர்ட்டா மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் கடந்த வாரத்தில் மட்டும் பல விபத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கல்கரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 3 இடங்களில் இத்தகைய விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
மெடிசின் ஹாட் பகுதியைச் சேர்ந்த ஃப்ரெட் டென்னிஸ் என்பவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த 'சோலார் லைட்' பேட்டரி வெடித்ததில் வீடு கடுமையாகச் சேதமடைந்தது.

தம்பதியினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் அவர்களின் வளர்ப்பு நாயும் பூனையும் தீயில் கருகி உயிரிழந்தன.
ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்சார சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்களில் இந்தப் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சார்ஜ் செய்யும்போது பேட்டரி அதிக வெப்பமடைந்து 'தெர்மல் ரன்அவே' எனும் நிலையை அடையும் போது மிக வேகமாகவும் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலும் தீ பரவுகிறது.
நகரத்தின் பொதுப் பாதுகாப்புக்கு மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய அச்சுறுத்தல் லித்தியம்-அயன் பேட்டரி தீ விபத்துகளே என டோரண்டோ நகரின் தீயணைப்புத் தலைவர் ஜிம் ஜெஸப் தெரிவித்துள்ளார்.
சாதனம் 100% சார்ஜ் ஆனவுடன் சார்ஜரிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பாதுகாப்புத் தரச் சான்றிதழ் பெறாத சாதனங்கள் மற்றும் போலி சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பேட்டரிகளை வீட்டுக்குப்பைகளுடன் வீசாமல், உரிய முறையில் மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் விற்பனை செய்யப்படும் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்புகள் மீது கடுமையான தேசியக் கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறை விதிகளையும் கொண்டு வர வேண்டும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.