அமெரிக்காவில் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுதும் பல்வேறு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன, "நோ கிங்ஸ்" (No Kings) என அழைக்கப்படும் குழு இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தது.
வாஷிங்டன் டிசியில் டிரம்ப் நடத்திய அரிதான ராணுவ அணிவகுப்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் மற்ற பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டங்களைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
டிரம்பை விமர்சிக்கும் வகையிலான பதாகைகள் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்திய மக்கள் கூட்டத்துக்கு நடுவே நியூயார்க், ஃபிலடெல்ஃபியா உட்பட பல நகரங்களில் மக்கள் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டை கொண்டாடும் விதமாக சனிக்கிழமை மாலை இந்த ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அன்றைய தினம் டிரம்புடைய பிறந்த தினமும் ஆகும். அணிவகுப்பின் போது ஏதேனும் போராட்டங்கள் நடத்தப்பட்டால் அவை "கடுமையாக ஒடுக்கப்படும்" என, டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.
பல லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.