உக்ரைனின் பொதுமக்களை படுகொலை செய்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கிய புடின்!
உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்களை படுகொலை செய்த ரஷ்ய ராணுவப்படை பிரிவிற்கு வீரம் மற்றும் தைரியத்திற்கான விருதை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) வழங்கி இருப்பது தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் முயற்சி செய்து கொண்டிருந்த போது அதன் வடமேற்கு நகரமான பூச்சாவில் ஆண்களை சித்தரவதை செய்து கொலை செய்வது, பெண்களை தகாத முறையில் கொலைசெய்வது போன்ற அத்துமீறல்கள் ரஷ்ய ராணுவம் மேற்கொண்டது.
இதனைத்தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் கவனம் செலுத்தும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்ததை தொடர்ந்து ரஷ்ய படைகள் அந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்கப்பட்டது.
ரஷ்ய படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்தப்பகுதிகளில் ரஷ்ய ராணுவம் நடத்திய கொடுமைகள் மற்றும் போர் குற்றங்கள் உலகிற்கு வெளிவர தொடங்கியது.
இதுகுறித்து அந்த நகரின் பாதிரியார் தெரிவித்த கருத்தில், ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் சித்தரவதை செய்து தகாத முறையில் கொலை செய்து தெருக்களில் ரஷ்ய ராணுவம் வீசி சென்று இருந்தது மிகப் பெரிய அழிவை கண்முன்னே காண்பித்தது என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக புச்சா நகரில் பார்வையிட்ட ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கண்களில் நீர்வழிய ரஷ்ய படைகளின் இனப்படுகொலை செயல் என்றும் இவை மிகப்பெரிய போர் அத்துமீறல்கள் என்பதால் இதற்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும் புச்சா நகரில் போர் அட்டூழியங்களை புரிந்த ரஷ்ய படைப்பிரிவு மற்றும் அதன் லெப்டினன்ட் கர்னல் அசாட்பெக் ஓமுர்பெகோவ்(Lieutenant Colonel Azadbek Omurbekov) ஆகியோரை உக்ரைன் நாட்டு உளவுத் துறை உலகிற்கு இந்த மாத தொடக்கத்தில் வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்தநிலையில், புச்சா நகரில் அத்துமீறிய வன்முறைகளை செய்த 64 வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவுக்கு ரஷ்ய ஜனாதிபதியின் கையொப்பமிட்ட காவலர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இவை உக்ரைன் நகரில் திறமையாகவும், வீரமாகவும் மற்றும் தைரியமாகவும் போரிட்டதற்காக வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
