பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற புட்டினின் கட்சி
ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரஷ்யாவில் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது.
ஜனாதிபதி புட்டினின்(vladimir putin) பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு, புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் தேவைப்பட்டதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது.
அதோடு அந் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை (alexei navalny) கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல்இடம்பெற்றது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகி இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றதாக ஐக்கிய ரஷ்யா கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளபோதும் அந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.