கனேடிய நகரமொன்று திடீரென இருளில் மூழ்கியதால் ஏற்பட்ட பரபரப்பு
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரை திடீரென இருள் சூழ்ந்ததால் மக்கள் திகிலடைந்தனர்.
ஏற்கனவே காட்டுத்தீ உருவாக்கிய புகை சூரியனை மறைத்திருக்க, அதைத் தொடர்ந்து கார்மேகங்கள் சூழ, பட்டப்பகல், இரவு போல மாற, தெரு விளக்குகள் எரியத் துவங்கியுள்ளன.

35 ஆண்டுகளுக்கு முன் மொன்றியலில் நிகழ்ந்த தங்கள் நிச்சயதார்த்தத்தை நினைவுகூருவதற்காக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வந்த சாரா லெட்ஸ்கி, La Tuqueஇல் தான் சந்தித்த அந்த அனுபவம் திகிலூட்டுவதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கிறார்.
மரச்சாமான்களை டெலிவரி செய்யும் வேலையைச் செய்யும் மார்க் லராம் என்பவர், புகை மற்றும் வெப்பம் காரணமாக தனது வேலை கடினமானதாக இருந்ததாக தெரிவிக்கிறார்.
புகையிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, நாம்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாகவேண்டும், இல்லையென்றால் மயக்கம் போட்டு விழவேண்டியதுதான் என்கிறார் அவர்.
இதற்கிடையில், காட்டுத்தீயால் பரவிவரும் புகையால் சாலைகளில் போதுமான வெளிச்சம் இல்லை என்றும், காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் எச்சரித்திருந்த கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, மக்கள் வீட்டுக்கு வெளியே நேரம் செலவிடுவதைக் குறைக்குமாறும், விளையாட்டு மைதானங்களில் விளையாடுவது முதலான நிகழ்ச்சிகளை குறைக்கவோ அல்லது மாற்றிவைக்கவோ செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.