எங்கள் குடும்பங்கள் தாலிபான்களிடம் சிக்கிவிட்டார்கள்: கியூபெக்கில் இருந்து எழும் அழுகுரல்
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், தங்கள் குடும்பங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கியூபெக்கில் வசிக்கும் ஆப்கான் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நீண்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கி முனையில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியுள்ளது தீவிரவாத அமைப்பான தாலிபான்.
தாலிபான் ஆட்சி இதற்கு முன்னர் மிகவும் கொடூரமாக இருந்ததுடன் பெண்கள் பல இன்னல்களை அனுபவித்ததுடன், கல்லால் அடித்தும் கொல்லப்பட்டனர்.
அதே நிலை தற்போதும் ஏற்படக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர் கியூபெக்கில் வசிக்கும் ஆப்கான் குடும்பங்கள். மொன்றியலில் வசிக்கும் Fahima Sultani என்பவர், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் காபூலில் சிக்கியுள்ள தமது உறவினர், அவரது மனைவி மற்றும் அவர்களின் 6 பிள்ளைகளின் நிலை குறித்து தெரிந்து கொள்ள முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் உயிருக்கு கண்டிப்பாக அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இது மிகுந்த வலியை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சில வாரங்களில் துப்பாக்கி முனையில் ஆட்சியை கைப்பற்றியது தாலிபான்.
இது மக்களுக்கு கடும் பீதியை அளித்ததுடன், நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணத்தால் காபூல் விமான நிலையம் மொத்தமாக கூச்சல் குழப்பத்தில் சிக்கியது.
2002ல் ஆட்சியில் இருந்து தாலிபான் வெளியேற்றப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான அகதிகளில் ஒருவராக கனடாவில் புலம்பெயர்ந்துள்ளார் Sultani. தற்போது காபூலில் சிக்கியுள்ள உறவினர்களுக்கு என்ன ஆனது என்ற தகவலுக்காக அவர் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.