கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடும் கியூபெக்
கியூபெக் மாகாணத்தின் அனைத்துப் பிராந்தியங்களும் ஜூன் 7 ஆம் திகதிக்குள், அதிகபட்ச தொற்றுநோய்-எச்சரிக்கை மட்டத்திலிருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுவதாக, மாகாண முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட் (Francois Legault) தெரிவித்துள்ளார்.
மாகாணத்தின் தொற்று நிலைமை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதால், விரைவில் நிலைமைகள் சீரடையும் எனவும் முதல்வர் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் எட்டு கியூபெக் பிராந்தியங்களில் தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் மே 31ஆம் திகதி தளர்த்தப்படும். ஐந்து பிராந்தியங்கள், முழுமையாக சிவப்பு மற்றும் செம்மஞ்சள் மட்டத்தில் இருந்து விடுபடுவதுடன், மூன்று பிராந்தியங்கள், மற்றும் சில மாநகர சபைகள் சிவப்பு வலயத்தில் இருந்து செம்மஞ்சள் வலையத்துக்கு நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் மொன்ட்றியல் நகரம், தொடர்ந்தும் ஜூன் 7ஆம் திகதி வரை சிவப்பு வலயத்தில் இருக்கும் என்றும் மாகாண முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட் (Francois Legault) மேலும் கூறியுள்ளார்.