கனேடிய மாகாணம் ஒன்றில் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகம்... திருப்பி அனுப்பப்பட்ட வாடிக்கையாளர்கள்
கனேடிய மாகாணமான கியூபெக் தடுப்பூசி பாஸ்போர்ட் முறையை நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விழாக்கள் முதலான நிகழ்வுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியற்றை அணுக, மக்கள் தாங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான சான்றாக இந்த தடுப்பூசி பாஸ்போர்ட்டைக் காட்டவேண்டும்.
இந்த தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில உணவகங்களுக்கு வந்த வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
பேக்கரி ஒன்றை நடத்தும் Hamid Kiani, தனது பேக்கரிக்கு வந்தவர்களிடம் தடுப்பூசி பாஸ்போர்ட்டைக் காட்டுமாறு கூறியதாகவும், மூன்று அல்லது நான்கு கூட்டங்களாக வந்தவர்களிடம் தடுப்பூசி பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களை திருப்பி அனுப்ப நேர்ந்ததாகவும் தெரிவிக்கிறார்.
மக்களும் புரிந்துகொண்டு பிரச்சினை செய்யாமல் ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவிக்கிறார், உணவகம் ஒன்றின் உரிமையாளர்களில் ஒருவரான Mélodie Roukoz என்பவர்.
இந்நிலையில், ஒத்துழைக்க மறுப்போருக்கு இரண்டு வாரங்களுக்கு மட்டும் கருணை அடிப்படையில் அபராதம் விதிக்கப்படாது என்று கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சரான Christian Dubé, ஆனால், செப்டம்பர் 15 முதல் விதி மீறுவோருக்கு ஆயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.