ஃப்ளோரிடா கடற்கரையில் ஏற்பட்ட விபத்தில் க்யூபெக் நபர் பலி
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், ஆர்லாண்டோ நகரத்திற்கு வடகிழக்கே உள்ள ஒரு கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 44 வயதான கனடாவின் க்யூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் கடற்கரை பாதுகாப்பு மற்றும் மீட்பு சேவையான Volusia County Beach Safety வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில், கரையிலிருந்து சுமார் 130–180 மீட்டர் தொலைவில் ஏற்பட்ட கடல் அலையில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மிதந்த நிலையில் இருந்த குறித்த நபரை மீட்ட உயிர்காப்பு படையினர், அவரை கரைக்கு கொண்டு வந்தபோது, அவருக்கு இதயத் துடிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபரின் உயிரை காப்பதற்கு உடனடியாக உயிர்காக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
முயற்சி பயனளிக்காத காரணத்தினால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் ஆனால் மருத்துவமனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.