இரண்டு நாட்களில் 20 பேர்களுக்கு பாதிப்பு உறுதி: அதிர்ச்சியில் கனேடிய மாகாணம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இரண்டு நாட்களில் 20 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் இரண்டு நாட்களில் மட்டும் 20 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாகாணம் முழுமையும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71 என அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை 52 என உறுதி செய்யப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை தற்போது மிக வேகமாக 71 என அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி, கனடாவிலேயே முதல் இருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது கியூபெக் மாகாணத்தில் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனடாவில் குரங்கம்மை தொற்றின் மிகப்பெரிய பரவல் மையமாக கியூபெக் மாகாணம் மாறியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒன்ராறியோவில் ஐந்து பேர்களுக்கும் ஆல்பர்ட்டாவில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே உலக நாடுகளில் இதுவரை 700 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 என அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஸ்பெயின் நாட்டில் 208 பேர்களுக்கும் இங்கிலாந்தில் 206 பேர்களுக்கும் போர்த்துகல் நாட்டில் 138 பேர்களுக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.