செப்டம்பர் 1 முதல் தடுப்பூசி பாஸ்போர்ட்: கனேடிய மாகாணம் ஒன்றின் முடிவு
கனடாவில், கொரோனாவின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் வகையிலும், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக கியூபெக் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகம் காணப்படுவதாலும், இந்த தடுப்பூசி பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்யவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளதாக கியூபெக் மாகாண சுகாதாரத்துறை அமைச்சரான Christian Dubé தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி பாஸ்போர்ட், உணவகங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், இசை நிகழ்ச்சிகள், மதுபான விடுதிகள், விளையாட்டுத் திடல்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதற்கு பயன்படும்.
இதற்கு முந்தைய கொரோனா அலைகளின்போது பல பொது இடங்கள் மூடப்பட்டதைப் போன்ற ஒரு நிலை உருவாகுவதை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத சம்பந்தமான கூடுகைகள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, அவற்றில் தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்துவருவதாக தெரிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர்.
அத்துடன், இப்போதைக்கு கடைகள் மற்றும் பள்ளிகளில் இந்த தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.