கொரோனாவே பொய் என்றாள்... கோமாவில் இருக்கும் மகள் குறித்து கண்ணீர் சிந்தும் கனேடிய தந்தை
கொரோனா பரவல் பொய்யென கூறி வந்த 21 வயது கனேடிய இளம் பெண், அதே தொற்றால் ஆபத்தான நிலையில் தற்போது கோமாவில் இருந்து வருகிறார்.
மாண்ட்ரீல் மருத்துவமனை ஒன்றில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவரும் தமது மகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவள் இனி திரும்பி வருவது கடினம் எனவும் அவரின் தந்தை கண்ணீர் சிந்தியுள்ளார்.
Mélodie Trépanier Léger என்பவருக்கு செப்டம்பர் 17ம் திகதி கொரோனா அறிகுறிகள் முதன் முதலில் தென்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது நிலை கவலைக்கிடமாக மாறவே, மருத்துவரீதியான கோமாவுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். தமது மகள் அதன் பிறகு கண் திறந்து நான் பார்க்கவில்லை என்கிறார், தந்தை Jimmy Trépanier.
கண்ணீர் சிந்தி நான் இப்போதெல்லாம் அழுவதில்லை, ஆனால் உண்மையில் எனது உள்ளம் வெந்து போயுள்ளது என்கிறார் Jimmy Trépanier. கொரோனா பரவல் பொய்யென வாதிட்டு வந்தவர் தமது மகள் என குறிப்பிட்டுள்ள Jimmy Trépanier, அதனாலையே தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இல்லாத நோயை இருப்பதாக காட்டி மக்களை அச்சுறுத்தி அரசாங்கம் ஆதாயம் தேடுகிறது என்றே அவர் வாதிட்டு வந்துள்ளார். இறுதியில், மரணத்தின் விளிம்பில் தமது மகள் உள்ளார் என கவலையுடன் தெரிவித்துள்ளார் Jimmy Trépanier.
தற்போது, தமது மகளின் நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறார்.
கியூபெக் மாகாணத்தை பொறுத்தமட்டில், தகுதிவாய்ந்த 85 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.