கனேடியர் உட்பட 17 பேர்கள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய திருப்பம்
ஹெய்தி நாட்டில் கனேடியர் உட்பட அமெரிக்க மிஷனெரிகள் 17 பேர்கள் கடத்தப்பட்ட நிலையில், தலா 1 மில்லியன் டொலர் தொகை கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
16 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனேடியர் என மொத்தம் 17 மிஷனெரிகளை ஹெய்தியின் மிகவும் பலம் வாய்ந்த 400 Mawozo என்ற கும்பல் கடத்தி சென்றது.
தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஒரு குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க 17 மில்லியன் டொலர் தொகை கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளும் ஹெய்தி பொலிசாரும் கடத்தல் கும்பலிடம் தொடர்பு கொண்டு வருவதாகவும், இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வர தாமதமாகலாம் என்றே கூறப்படுகிறது.
தங்களின் குழுவினர் சிலரை விமான நிலையத்திற்கு அனுப்புவதற்காக இந்த மிஷனெரிகள் சென்ற நிலையில், அவர்கள் சென்ற பேருந்து கடத்தப்பட்டுள்ளது.
மிஷனெரிகள் 17 பேர்கள் கடத்தப்படுவதற்கு சற்று முன்பு, கடத்தல்கள் மற்றும் பிற சம்பவங்களை காரணமாக கூறி ஹெய்திய போக்குவரத்து தொழிற்சங்கம் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.