அரிதான கொரோனா அறிகுறிகளுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையை நாடிய இளம்பெண்
பிரிட்டிஷ் கொலம்பியா இளம்பெண் ஒருவர் அரிதான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடியுள்ளார்.
பொதுவாக சிறார்களில் மட்டுமே காணப்படும் இந்த அறிகுறிகள் பிராந்தியத்திலேயே முதன் முறையாக 19 வயதான இளம்பெண் ஒருவரிடம் காணப்பட்டுள்ளது.
Maple Ridge பகுதியை சேர்ந்த 19 வயதான Zoe Olson தற்போது MIS-C என மருத்துவர்களால் அடையாளம் காணப்பட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஏப்ரல் இறுதியில் ஓல்சனுக்கு லேசான காய்ச்சல் காணப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 4 நாட்களில் உடல் மொத்தம் வலியாக மாறியது.
தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத குமட்டல் மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மூச்சுவிட முடியாமல் தவித்துப்போயுள்ளார். கூடவே, இதயத்துடிப்பு 130 தாண்டவே, ஓல்சனின் தந்தை அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.
மருத்துவர்கள் கொரோனா அறிகுறிகள் என கருதி அதற்கான சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
பின்னர் குடல் அழற்சி என கருதி அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் இல்லை என முடிவானது. இருப்பினும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில், அவரது உள் உறுப்புகளில் வீக்கம் காணப்பட்டுள்ளது.
மட்டுமின்றி அவருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் வீடு திரும்பினாலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் பக்கவிளைவுகள் அடுத்த சில மாதங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்ததே இந்த நிலைக்கு ஒரு காரணம் என ஓல்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.