அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் ; வெனிசுவேலா அதிபர் அறிவிப்பு!
வெனிசுவேலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுடன், பேச்சுவார்த்தைக்குத் தயார் என அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
போதைப் பொருள் பயங்கரவாதத்தைத் தடுப்பதாகக் குறிப்பிட்டு, கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா நாட்டுக்கு எதிராக கடல் மற்றும் வான்வழி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்த நடவடிக்கைகள் மூலம் கரீபியன் மற்றும் பசிபிக் கடல்பகுதியில், போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி இதுவரை 30-க்கும் அதிகமான கப்பல்களின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளன.

இதனால், 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில், வெனிசுவேலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொண்டால், பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது: “கடந்த 25 ஆண்டுகளாக வெனிசுவேலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயன்று தோல்வியடைந்த முயற்சிகளை முழுவதுமாகக் கைவிட அமெரிக்கா முடிவு செய்தால், அந்நாட்டுடன் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” எனப் பேசியுள்ளார்.
இத்துடன், வெனிசுவேலா அரசைக் கவிழ்பதற்காக அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தொடர் அவதூறுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அமெரிக்க ஊடகங்கள் வெனிசுவேலா குறித்து முழுமையான புரிதலுடன் செய்திகளை வெளியிட வேண்டுமெனவும், அதிபர் மதுரோ தெரிவித்துள்ளார்.