கனடா பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வி
கனடா பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவது குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, பிரதமர் மார்க் கார்னிக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கனடா புள்ளிவிபரவத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகச் சரிவைச் சந்தித்துள்ளது.
இது 'தொழில்நுட்ப ரீதியான பொருளாதார மந்தநிலை' என வரையறுக்கப்படுகிறது. பிரதமர் மார்க் கார்னிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

G7 அமைப்பிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கனடாவிற்கு வழங்குவதாக நீங்கள் உறுதியளித்தீர்கள்.ஆனால், G7 நாடுகளிலேயே பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும் ஒரே நாடாகக் கனடாவை மாற்றியிருக்கிறீர்கள். இந்த மந்தநிலை உண்மையானது என தெரிவித்துள்ளார்.
இதன் அர்த்தம் என்னவென்றால், பசியோடு இருக்கும் தாய்கள், காலியான மளிகைப் பைகள் மற்றும் காலியான வங்கி கணக்குகள் தான். அடுத்த மாத வீட்டுக் கடனை எப்படிச் செலுத்தப் போகிறோம் என்று தெரியாமல் இரவில் தூக்கமின்றி தவிக்கும் நடுத்தர மக்களின் வேதனைதான் இந்த மந்தநிலை என தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொய்லிவ்ரே, இந்த லிபரல் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை மாற்றுவது மட்டும்தான் இதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி என்றார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் லிபரல் கட்சி கொண்டு வந்த அனைத்துப் பொருளாதாரக் கொள்கைகளையும் ரத்து செய்யும் புதிய மசோதாவை அடுத்த வாரமே நாடாளுமன்றத்தில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.