கனேடிய மாகாணமொன்றில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வரலாறு காணாத அளவு வெப்பம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், ஆகத்து மாதத்தில் மட்டுமே இரண்டாவது முறையாக வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.
1916இல் மொன்றியலில் கனடா வரலாற்றில் மூன்று நாட்களுக்கும் அதிகமாக 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அதையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது என்கிறார் வானிலை ஆராய்ச்சியாளரான Legault.
ஆம், கடந்த சனிக்கிழமை மொன்றியலில் பதிவான வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸ் ஆகும்.
அதேபோல், தென்மேற்கு கியூபெக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வரலாறு காணாத அளவு வெப்பத்தை சந்தித்து வருகிறது. அடுத்த வாரம் வரை இதே நிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்த கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, கியூபெக்கில் வியாழக்கிழமை வரை 35 முதல் 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் நிலவலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால், சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நீண்டகால உடல் நல பிரச்சினைகள் உடையவர்கள், வெளியிடங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் ஆகியோருக்கு அபாயம் அதிகம் என்கிறது கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு.