இது ஒரு நல்ல செய்தி... தடுப்பூசியைத் தொடர்ந்து கனடாவில் கணிசமாக குறைந்துள்ள கொரோனா பரவல்
கனடா தொடர்ந்து பெருமளவில் தன் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிவருவதைத் தொடர்ந்து கொரோனா பரவல் பெருமளவில் குறைந்துள்ளதாக கனடாவின் பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.
மே 13 நிலவரப்படி, கொரோனா தடுப்பூசியின் முதல் டோசைப் பெற்றுக்கொண்டவர்களில் 13,461பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. அவர்களில் 64 சதவிகிதம்பேர் தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்குள் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள்.
36 சதவிகிதம்பேர் 14 நாட்களுக்குப்பின் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள். இது எதைக் காட்டுகிறது என்றால், தடுப்பூசி போட்ட பிறகும், பகுதியளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறக்கூட கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதைத்தான். ஆனால், மொத்தத்தில் கணக்கிடும்போது, தடுப்பூசி கொரோனா பரவலின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்துள்ளது.
இது ஒரு நல்ல செய்தி என்கிறார் McMaster பல்கலைக்கழக தொற்று நோயியல் துறை நிபுணரான Dr. Zain Chagla. இது ஒரு மிகச்சிறந்த எண்ணிக்கை என்கிறார் அவர். கனடாவில், டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை 1,3420,198 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது.
மே 13 வாக்கில் 750,569 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்றியவர்களில் 4,900 பேர் மட்டுமே தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டவர்கள்.
அதாவது, தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டவர்களில் குறைவானவர்களே நோய் தொற்றுக்கு ஆளாகியிருந்தார்கள். ஒரு படி மேலே போய், மே 13 நிலவரப்படி கனடாவின் மக்கள் தொகையில் 3,54 சதவிகிதத்தினருக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டிருந்தது.
அப்போது, இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்றுக்கொண்டவர்களில் 740 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்கள்.
ஆக, தடுப்பூசியால் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது இந்த எண்ணிக்கைகளிலிருந்து ஊர்ஜிதமாவதாக கனடாவின் பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது கனடாவுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது.