இந்தியாவை மொத்தமாக உலுக்கும் கொரோனா பரவல்... பதைபதைப்புடன் வாட்டர்லூ மக்கள்
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வரும் நிலையில், ஒன்ராறியோவின் வாட்டர்லூ நகர மக்கள் பதைபதைப்புடன் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று ஒன்ராறியோவின் வாட்டர்லூ நகரம். சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் கண்டு வரும் நிலையில், அங்குள்ள உறவினர்களின் நிலவரம் குறித்து அறிந்துகொள்ள நாளும் பதைபதைப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து நம்ப முடியவில்லை என்பது மட்டுமல்ல, இங்கே தங்களால் நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை என தெரிவித்துள்ளார் வில்மோட் டவுன்ஷிப்பில் வசிக்கும் மீனு பக்ரு.
பக்ரு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் குடியேறியவர், ஆனால் அவரது குடும்பத்தில் பெரும்பாலோர் இன்னும் டெல்லியில் வசிக்கின்றனர்.
அவர்களில் 6 பேர் கொரோனா பாதிப்பிக்கு இலக்கானதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழல் தமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் பக்ரூ, தமது உறவினர்களுடன் தொடர்ந்து மொபைல் அழைப்பிலும், குறுந்தகவல்களிலும் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதே நிலை தான் வாட்டர்லூ பகுதியில் குடியிருக்கும் ராஜ் மர்வாவுக்கும். இவருக்கு பஞ்சாப் மாநிலத்திலும் டெல்லியிலும் உறவினர்கள் உள்ளனர், மேலும் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
சமீப மாதங்களாக உறவினர்கள் பலர் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதாகவும், சகோதரிகளின் கணவர் ஒருவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மார்வாவின் குடும்பத்தில் உள்ள ஒரு இளம் பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த தகவல் தம்மை மொத்தமாக உலுக்கியுள்ளதாக தெரிவித்துள்ள மார்வா, ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் தேர்தல் பிரச்சார கூட்டங்களும்,
பொது சுகாதாரத்தை பேணாத மக்களின் அலட்சிய போக்கும் தமக்கு பார்க்க வெறுப்பாக இருந்தது என தெரிவித்துள்ளார்.