ஜெர்மனியில் பாடாய்ப்படுத்தும் சேவல்; நீதிமன்றம் சென்ற விவகாரம்!
ஜெர்மனியை சேர்ந்த முதிய தம்பதி பக்கத்து வீட்டில் இருக்கும் சேவலால் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அந்த சேவல் எந்நேரமும் கூவிக் கொண்டே இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது எனக் குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள்.
67 வயதான ஃபெட்ரிச் வில்ஹெல்ம் அவரது மனைவி ஜுட்டா உடன் ஜெர்மனியின் Bad Salzuflen பகுதியில் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் வசிக்கும் மைக்கேல் என்பவரின் சேவலால்தான் இந்த தம்பதி மட்டுமல்லாமல் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.
ஏனெனில், அந்த சேவல் காலை 8 மணிக்கு முன்பு வரை கூவாமல் இருந்துவிட்டு, நாள் முழுவதும் 100 முதல் 200 முறை கூவுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.
வீட்டை காலி செய்த குடும்பம்
இது தொடர்பாக சேவலை வளர்க்கும் மைக்கேலிடம் பல முறை சொல்லியும் எந்த பயனும் இல்லை என்பதால் ஒரு குடும்பமே வீட்டை காலி செய்துவிட்டார்கள். இதனால்தான் வழக்கு தொடர முடிவெடுத்து சேவல் கூவும் சத்தத்தையும் பதிவு செய்திருக்கிறோம்.
அதன்படி 80 முதல் 95 டெசிபல் வரை அந்த சேவல் கூவுகிறது. அத்துடன் அதன் சத்தம் டிராஃபிக் நிறைந்த வாகனங்களின் சத்தத்திற்கு இணையாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்.
அதேவேளை மக்டா என பெயரிடப்பட்டிருக்கும் அந்த சேவல் தன்னுடைய தோட்டத்துக்கு தேவையானதாக இருக்கிறது எனவும் மைக்கேல் கூறியுள்ளாராம்.