உதவி கோரிய ரஷ்யா; கனடா மீது கடும் சினத்தில் உக்ரைன்!
ரஷ்ய நிறுவனமான Gazprom, தனது Nord Stream 1 திட்டத்தின் கீழ், குழாய் மூலம் ஜேர்மனிக்கு எரிவாயு அனுப்பிவந்தது. தற்போது, எரிவாயு வழங்கும் அமைப்பில் உள்ள ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டதால், அது அந்த இயந்திரத்தை சரி செய்ய கனடாவின் உதவியை ரஷ்யா நாடுகிறது .
இந்நிலையில் பழுது நீக்குவதற்காக ரஷ்ய நிறுவனமான Gazprom, கனடாவிலுள்ள Siemens Canada என்ற நிறுவனத்திடம் அந்த இயந்திரத்தைக் கொடுத்துள்ளது. இப்போது கனடா ரஷ்யாவின் இயந்திரத்தை சரி செய்து கொடுத்தால்தான், ஜேர்மனிக்கு எரிவாயு கிடைக்கும் என்ற நிலமையில் உள்ளது.
ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது பல நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் கனடாவும் ஒன்று. ரஷ்யா மீது தடை விதித்துள்ளதால், கனடா அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்குத் திருப்பிக் கொடுக்கக்கூடாது, அப்படிக் கொடுத்தால் அது தடைகளை மீறும் செயலாகும் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) எதிர்ப்பு தெரிவிக்கிறார் .
அதேவேளை , அந்த இயந்திரத்தைக் கொடுக்காவிட்டாலோ, ஜேர்மனிக்கு எரிவாயு கிடைக்காது. ஆக, கனடா இக்கட்டான ஒரு சூழலுக்குள்ளாகியுள்ள நிலையில் , தடைகளை மீறி, அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்குத் திருப்பிக் கொடுப்பது என கனடா அரசு முடிவு செய்துள்ளது.
அந்த இயந்திரத்தைப் பழுது நீக்கி, ரஷ்ய எரிவாயு நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுக்க, Siemens Canada நிறுவனத்துக்கு கனடா அரசு குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் இந்த அனுமதி எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என்ற நிபந்தனையின் பேரிலேயே அந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)கூறுகையில்,
ரஷ்யாவின் அந்த இயந்திரத்தைத் திருப்பிக் கொடுக்கும் முடிவு கடினமான ஒன்றுதான் என்றும், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய கூட்டாளர் நாடுகள் எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இதனால் , அரசாங்கங்களுக்காக மட்டும் அல்ல, மக்களுக்காக, அவர்கள் தொடர்ந்து உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை பெருமளவில் அளிக்கவேண்டும் என்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.