அகதிகளாக வெளியேறிய 68 லட்சம் மக்கள்: 100வது நாளை எட்டிய ரஷ்ய போர்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், உக்ரைனிலிருந்து இதுவரை 68 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி தாக்குலை தொடங்கியது ரஷ்யா. சிறப்பு இராணுவ நடவடிக்கை என ரஷ்யா குறிப்பிடும் இந்த போர் 100 நாட்களை எட்டியுள்ளது.
தற்போது உக்ரைனின் 20% நிலப்பரப்பு ரஷ்ய துருப்புகளின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. ரஷ்ய தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, உக்ரைன் மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர். இது தவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.
போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் மக்கள் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா தாக்குதல் காரணமாக உக்ரைனிலிருந்து மொத்தம் 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு உக்ரைன் மக்கள் தொகை 4 கோடியே 30 லட்சமாக இருந்தது. தற்போது 3 கோடியே 70 லட்சமாக குறைந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டதிலிருந்து, ஐரோப்பா எதிர்கொண்ட மிகப்பெரிய அகதிகள் பிரச்சினை இதுதான் என கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டுக்குள் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் பேர், பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதனிடையே, ரஷ்யா பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
உக்ரைன் மீது தாக்குதல் முன்னெடுத்தது முதல் தற்போது வரை ரஷ்யா மீது உலக நாடுகள் 5,831 தடைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.