ரஷ்ய விமானம் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இடைநிறுத்தம்!
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் தடை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின் பிரகாரம், ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவிருந்த ஏ330 ரக விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது.
அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
பிரதிவாதி தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் குறித்த தடை உத்தரவை பிறப்பித்தார்.
எவ்வாறாயினும், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, குறித்த தடை உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டார்.