நாங்கள் முடிவு செய்வோம்... போர் தொடரும்: விளாடிமிர் புடின் ஆவேசம்
ரஷ்யாவின் இலக்கை எட்டும் வரையில் உக்ரைனில் போர் நீடிக்கும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இதுவரை தங்கள் திட்டத்தின் படியே, போர் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
கீவ் நகரில் இருந்து பின் வாங்கியது, மரியுபோல் நகரில் கடும் பின்னடைவை எதிர்கொண்டது என ரஷ்ய துருப்புகள் பேரிடியை சந்தித்தாலும், விளாடிமிர் புடின் நிர்வாகம் உக்ரைன் படையெடுப்பு தொடர்பில் இதுவரை தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
தற்போது அவர்கள் கிழக்கு உக்ரைனில் தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கான படைகளை கிழக்கு உக்ரைனில் ரஷ்யா குவித்துள்ளது.
மிக மோசமான போராக இது இருக்கும் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், துணிவுடன் எதிர்கொள்ள நாங்கள் தயார் என உக்ரைன் தரப்பும் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, ரசாயன ஆயுதங்களை மரியுபோல் நகரில் பயன்படுத்தி சோதனை மேற்கொண்டுள்ள ரஷ்யா, இந்த முறை கிழக்கு உக்ரைனில் அதை முன்னெடுக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
ஆனால், அவ்வாறான சூழல் ஏற்பட்டால், பிரித்தானியா மற்றும் நேட்டோ நாடுகள் தங்கள் துருப்புகளை உக்ரைனில் களமிறக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் முடிவு செய்வோம் எனவும், சிறப்பு இராணுவ நடவடிக்கையானது தொடரும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.