லிஸ் டிரஸின் செல்போனை ஹேக் செய்த ரஷ்யா!
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சான்(Boris Johnson) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று லிஸ் டிரஸ் (Liz Truss) பிரதமரானார். ஆனால் டிரஸ் பிரதமராக பதவி ஏற்று வெறும் 45 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயதுடைய ரிஷி சுனக்(Rishi Sunak) இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் லிஸ் டிரஸ், (Liz Truss) போரிஸ் ஜான்சானின்(Boris Johnson) ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ரஷியாவை சேர்ந்த உளவாளிகள் சிலர் அவரது செல்போனை ஹேக் செய்து உளவு பார்த்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்தின் வெளியுறவு கொள்கைள் குறித்து நாட்டின் நட்பு நாடுகளுடன் லிஸ் டிரஸ் (Liz Truss) நடத்திய உரையாடல்கள் அனைத்தும் செல்போன் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதோடு, அவரது தனிப்பட்ட உரையாடல்களும் கண்காணிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி அவரது செல்போனில் இருந்து அனைத்து அரசு சார்ந்த குறுஞ்செய்திகளும், சில முக்கிய தகவல்களும் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இந்த விவகாரம் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று இங்கிலாந்து எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.