அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க ஆயத்தமாகும் ரஷ்யா
அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஆயத்தமாகும் வகையில், அதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு தனது பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதன் எதிரொலியாக புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அணு ஆயுத சோதனை
இது குறித்து மாஸ்கோவில் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புதின் பேசியதாவது:
நிறுத்திவைக்கப்பட்ட அணு ஆயுத சோதனைகளை மறுபடியும் நடத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை. ஆனால், அமெரிக்கா அத்தகைய சோதனையில் ஈடுபட்டால் ரஷ்யாவும் அந்த நடவடிக்கையில் இறங்கும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அண்மைக்கால உத்தரவையடுத்து, அந்த நாடு மீண்டும் அணு ஆயுத வெடிப்பு சோதனைகளை நடத்தவிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில் அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் புதின்.