உக்ரைனுக்கு காத்திருக்கும் பேராபத்து; இங்கிலாந்து விடுத்த எச்சரிக்கை!
கிழக்கு உக்ரைனில் அடுத்த 2-3 வாரங்களில் ரஷ்யாவின் போர் தீவிரமடையும் என்று இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 6 வாரங்களை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது.
அப்பாவி மக்களை குறிவைத்து ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதன் மூலம் ரஷ்ய படைகள் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உக்ரைன் தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த வாரம் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் ரஷ்ய வீரர்களால் துன்புறுத்தி கொல்லப்பட்டது தெரியவந்தது.
புச்சா நகரின் வீதிகளில் மனித உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்நிலையில் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1,200-க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய படைகள் வீசும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோ நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 ‘எஸ்300’ வான்பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) ரஷ்ய படைகள் இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கலாம் என்பதால், அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அங்கு சண்டை தீவிரமடையும் என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்கள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் அருகே கெர்சன் மற்றும் மைகோலைவ்வைச் சுற்றி கடுமையாக போர் புரிவதற்காகவும், கிராமடோர்ஸ்க்கை நோக்கி ஒரு புதுப்பிக்கப்பட்ட உந்துதலுடன் கவனம் செலுத்துவதாகவும் இங்கிலாந்து இராணுவ உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.