ரஷ்ய - அமெரிக்க விமானங்களால் நடுவானில் பரபரப்பு!
சிரியா வான்பரப்பில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானத்தை ஒட்டி ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததால் அமெரிக்க வீரர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. அதேவேளை சிரிய அதிபர் அல் அசாத்துக்க ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.
சிரியா வான்பரப்பில் அமெரிக்கா கண்காணிப்பு
இந்த உள்நாட்டு போரின் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் சிரியாவில் பதுங்கி உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்கா , சிரியாவில் முகாமிட்டு கண்காணித்து வருகிறது.
தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளை குறி வைத்து வான்வழி தாக்குதல்களும் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் எம்சி-12 ரக போர் விமானத்தில் 4 வீரர்கள் சிரியாவின் வான்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ரஷ்யாவின் எஸ்யு-35 ரக போர் விமானம் அமெரிக்க போர் விமானத்தை உரசும் வகையில் பறந்து சென்றது.
ரஷ்யா விமானம் மோதுவதை தவிர்க்க அமெரிக்க வீரர்கள் முயன்றபோது அமெரிக்க விமானம் குலுங்கியதால் வீரர்கள் பதற்றம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், சிறிது நேரத்திலேயே ரஷ்ய போர் விமானம் விலகி சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.