உக்ரைன் குழந்தைகளுக்காக நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிகையாளர்! எத்தனை கோடி தெரியுமா?
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
இதற்கிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கமும், 5 லட்சம் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசுத்தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு தற்போது 103 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 808 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் வழங்கியுள்ளார்.
இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.