தெருக்கள் முழுவதும் சடலங்கள்... கோபத்தில் கொந்தளித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றும் நோக்கில் தொடர் தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்யாவுக்கு உக்ரைன் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து இரண்டுமாத காலமாக தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய துருப்புகள் தற்போது துறைமுக நகரமான மரியுபோல் நகரின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் துருப்புகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவும் மிரட்டல் விடுத்துள்ளது. வடக்கில் உக்ரேனிய எதிர்ப்பை முறியடிக்க முடியாமல் தடுமாறிய பின்னர், ரஷ்ய இராணுவம் அதன் தரைவழித் தாக்குதலை டான்பாஸ் மீது மீண்டும் முன்னெடுத்தது.
மட்டுமின்றி, தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகள் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவில் கடந்த நான்கு நாட்களில் முன்னெடுக்கப்பட்ட ஷெல் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்ட பயங்கரவாதம் என கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெலென்ஸ்கி. குடியிருப்புகள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுப்பதை பயங்கரவாதம் என்றே விமர்சிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெருக்கள் முழுவதும் சடலங்களால் மூடப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா தனது காட்டுமிராண்டித்தனத்தை கைவிட வேண்டும் என உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், உக்ரைனின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்துள்ள ரஷ்யா, பொதுமக்கள் மீது எப்போதும் தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நடவடிக்கை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனிடையே, மரியுபோல் நகரம் இதுவரை உக்ரைன் வசமே உள்ளது எனவும், ரஷ்யா பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதாகவும், அப்பாவி மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை இதுவெனவும் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.