புர்ஜ் கலிபாவுக்கு சவால் விடும் சவூதியின் புதிய பிரம்மாண்டமான திட்டம்!
சுமார் 500 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் நியோம் எனப்படும் முற்றிலும் புதிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்ட இருப்பதாக சவூதி அறிவித்துள்ளது.
சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சிந்தனையில் உருவான இந்த நியோம் சுமார் 500 மீட்டர் உயரமுள்ள கட்டிடமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
828 மீட்டர் உயர புர்ஜ் கலிபா உட்பட பல கட்டிடங்கள் துபாயின் அடையாளமாக உள்ளன. அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென்பது சவுதியின் நீண்ட நாள் கனவு.
இந்த நிலையில் தான் சவூதியின் பட்டத்து இளவரசரும், நாட்டின் தற்போதைய ஆட்சியாளருமான முகமது பின் சல்மானின் சிந்தனையில் உருவான நியோம், சுமார் 500 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்களோடு நீண்ட தூரத்துக்கு கிடைமட்டமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள செங்கடல் கடற்கரையிலிருந்து பாலைவனத்திற்கு இடையில் அமைக்கப்படும் இந்த நியோமில், வானளாவிய கட்டிடங்கள், குடியிருப்பு, சூப்பர் மார்கெட்டுகள், தியேட்டர்கள் மற்றும் அலுவலக என அனைத்தும் இதில் இருக்கும். அவை அனைத்தும் அதிவேக சுரங்க ரயில் மூலம் இணைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் முழுமையாக அமைக்கப்பட்டால் இதில் உள்ள ஒவ்வொரு கட்டமைப்பும் உலகின் தற்போதைய மிகப்பெரிய கட்டிடங்களை விட பெரியதாக இருக்கும், அவற்றில் பெரும்பாலானவை குடியிருப்புகளை விட தொழிற்சாலைகள், மால்கள் போன்றவையாகத்தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதும், எண்ணெய் விற்பனையை நம்பாமல் சவூதியின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதும் முகமது பின் சல்மானின் திட்டத்தின் ஒரு பகுதியாகவுள்ளது.
மேலும் சுற்றுலா போன்ற பிற துறைகளும் இத்திட்டத்தின் மூலம் வளர்ச்சியடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.