இந்தியா மற்றும் பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவுதி விசா தடை
இந்தியா மற்றும் பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜூன் மாத நடுப்பகுதிக்குள் விசா தடை அகற்றப்படலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. அதன்படி பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் யெமன் ஆகிய நாடுகளுக்கு விசா தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - தவறினால் அபராதம்
இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களையும் சவுதி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர். சிலர் சவுதி அரேபியாவிற்குள் நுழைய பல நுழைவு விசாக்களைப் பயன்படுத்தி ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
இதன் விளைவாக கடுமையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தற்காலிக கட்டுப்பாடுகளுக்குக் காரணம், வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்வது, விசா நிபந்தனைகளை மீறுவது மற்றும் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை ஏற்படுத்துவதுதான்.
எனவே, ஹஜ் பருவத்தில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேவேளை விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். மேலும் அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சவுதி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.