தந்தையின் 20 ஆண்டு நம்பிக்கையை பொய்யாக்கிய மகன் ; கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்
20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி அரேபியாவின் இளவரசர் அல் சவுத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். சவுதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீசின் தலைமுறையில் வந்த கொள்ளு பேரன் ஆவார்.
இவர் கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். அப்போது அவருக்கு வயது 15 ஆகும்.
தந்தையின் நம்பிக்கையை பொய்யாக்கிய மகன்
கோமா நிலையில் அவர் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்தார். இதனால் அவர் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளவரசர் அல் சவுத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார்.
இளவரசரின் இறுதிச் சடங்குகள் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் கோமாவில் இருந்து மீண்டு வர வாய்ப்பு குறைவு என்பதால் வென்டிலேட்டரை அகற்ற அரச குடும்பத்தினரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தனது மகனுக்கு சுயநினைவு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அது கடைசிவரை நிறைவேறவில்லை என்பதுதான் துயரம்.