பிராம்டனில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி பெண் வழக்கில் முக்கிய திருப்பம்
பிராம்டனில் கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட 56 வயது பெண்மணி வழக்கில் பீல் பொலிசார் இரண்டாவது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பிராம்டனில் கடந்த 2020 ஆகஸ்டு 13ம் திகதி குடியிருப்பின் அருகே, சங்கீதா சர்மா என்ற 56 வயது இந்திய வம்சாவளி பெண்மணி துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
ஆனால் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில், காயங்கள் காரணமாக அவர் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் ஓராண்டாக முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
தற்போது இரு சந்தேக நபர்களை பீல் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 23ம் திகதி ஆல்பர்ட்டாவின் Fort McMurray பகுதியில் வைத்து 23 வயதான Malik Essue என்பவரை இந்த கொலை வழக்கு தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒன்ராறியோவின் லண்டனை சேர்ந்த அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி கடந்த 4ம் திகதி 19 வயதான Fiseha Girmay Habtegabir என்ற இளைஞரை இந்த கொலை வழக்கு தொடர்பில் பொலிசார் கைது செய்திருந்தனர்.
இருவர் மீதும் தற்போது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக பீல் பொலிஸ் தலைவர் நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் தொடர்பில் பொலிசார் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என நம்புவதாக தெரிவித்துள்ள பொலிசார், அவர்கள் மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.