பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் அதிரடி ; 31 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் லக்கி மாவட்டத்தில் 14 பயங்கரவாதிகள், பனு மாவட்டத்தில் 17 பயங்கரவாதிகள் என மொத்தம் 31 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த அமைப்புகளை அழிக்க பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மற்றும் பனு மாவட்டங்களில் தெஹ்ரி இ தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நேற்று இரு மாவட்டங்களில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பதுங்கி இருந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இந்த மோதலில் லக்கி மாவட்டத்தில் 14 பயங்கரவாதிகள், பனு மாவட்டத்தில் 17 பயங்கரவாதிகள் என மொத்தம் 31 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும், என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி, வெடிகுண்டு உள்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.