பிரித்தானியாவில் இவர்களுக்கு மட்டும் சுய-தனிமை விதிகளிலிருந்து விலக்கு! வெளியான முழு பட்டியல்
பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட தொழிலாளர்கள் சுய தனிமை விதிகளிலிருந்து விலக்கு பெறும் துறைகளின் பட்டியல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, டெல்டா கோவிட் மாறுபாடு பரவத் தொடங்கியதிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் சுய தனிமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் ஒரு கோவிட் பாசிட்டிவான நபருடன் தொடர்பு கொண்டால், யாராக இருப்பினும் பத்து நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது விதி.
ஆனாலும் கூட, நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சில முக்கிய துறையில் உள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும்.
அவர்கள் முழுமையாக கோவிட் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையை எடுக்க வேண்டும், அதுமட்டுமின்றி அவர்கள் தினசரி பக்கவாட்டு ஓட்ட சோதனைகளை (lateral flow tests) மேற்கொள்ளவேண்டும்.
முன்னணி NHS மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கு மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தைத் தணிக்க, இதுபோன்ற சூழ்நிலைகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்து ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதலாக 16 துறைகளை அரசு பட்டியலிடுகிறது: 1) மின்துறை, 2) சிவில் அணு, 3) டிஜிட்டல் உள்கட்டமைப்பு, 4) உணவு உற்பத்தி மற்றும் வழங்கல், 5) கழிவு, 6) தண்ணீர், 7) கால்நடை மருந்துகள், 8) அத்தியாவசிய இரசாயனங்கள், 9) அத்தியாவசிய போக்குவரத்து, 10)மருந்துகள், 11) மருத்துவ சாதனங்கள், 12) மருத்துவ நுகர்வு பொருட்கள், 13) அவசர சேவைகள், 14) எல்லை கட்டுப்பாடு, 15) அத்தியாவசிய பாதுகாப்பு, 16) உள்ளூர் அரசு.
இவற்றை தவிர, சில சந்தர்ப்பங்களில் மற்ற துறைகளில் முக்கியமான பாத்திரங்களை வகிக்கும் தொழிலாளர்களுக்கும் அவசரகால அடிப்படையில் விலக்கு அளிக்கப்படலாம்.
அதேபோல், சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறையிலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றிருந்தால், பெயரிடப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும்.