ஆப்கானில் நிலவும் கடும் மனிதாபிமான பற்றாக்குறை...ஐ .நா. தகவல்
ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வெளியிட்ட செய்தியில், ' ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு உணவு, மருந்து, தண்ணீர், சுகாதார வசதிகள் என அனைத்தும் தேவைப்படுகிறது. கரோனா மற்றும் வறட்சியாலும் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பாதி மக்கள் தொகைக்கு உதவி தேவைப்படுகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு 600 மில்லியன் டொலர் திரட்ட முயன்று வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி பரதார் துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருக்கிறார்.