அமெரிக்காவில் சிறுநீரகத்தை தானம் வழங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அமெரிக்காவில் ஒரு நபர் தனது சிறுநீரகத்தை தானம் செய்ததற்காக சுமார் 10 லட்சம் ரூபாய் மருத்துவக் கட்டணமாக அனுப்பபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 28 வயதான ஸ்காட் கிலைன் என்ற நபர் சிறுநீரக செயலிழக்கும் நிலையில் கடைசி கட்டத்தில் உயிருக்கு போராடி வந்தார்.
இதன் காரணமாக கிலைனின் தாயார் சிறுநீரக தானம் செய்யும் நபரைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் பலரைத் தொடர்பு கொண்டபோதும், யாரும் சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வரவில்லை.
இந்நிலையில் எலியட் மாலின் என்பவர் தனது சிறுநீரகத்தை ஸ்காட் கிலைனுக்கு தானம் செய்ய முன்வந்தார். மாலின் தானம் செய்ய முடிவு செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, கிலைன் சிறுநீரகம் முலுவதும் பழுதடைந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
இதனையடுத்து ஜூலை 2021 இல் டெக்சாஸின் போர்ட் வொர்த்தில் உள்ள மருத்துவமனையில் திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதேவேளை தங்கள் உறுப்பை தானமாக கொடுப்பவர்களுக்கு மருத்துவக் கட்டணங்கள் எதுவும் அனுப்பப்படக் கூடாது.
மருத்துவச் செலவுகள் பொதுவாக உறுப்பை பெறுபவரின் காப்பீட்டால் ஈடுசெய்யப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மாலினின் விஷயத்தில் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது.
ஸ்காட் கிலைனுக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவிற்கான பில்லாக சுமார் 10 லட்சம் ரூபாய் மருத்துவக் கட்டணமாக எலியட் மாலினுக்கு அனுப்பப்பட்டது.
இது தாராள மனதுடன் தானம் செய்ய வந்த அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், நார்த்ஸ்டார் என்ற மயக்க மருந்து வழங்கும் நிறுவனம், பில் செலுத்தாமல் இருந்தால் அபதாரம் வசூலிக்கபடும் என்றும் மிரட்டியது.
அதன் பின்னர், பில்லிங் தவறு காரணமாக மருத்துவக் கட்டணம் மாலினுக்கு அனுப்பப்பட்டதாக நார்த்ஸ்டாரின் தலைமை நிர்வாக அதிகாரி மாலினுக்கு மன்னிப்புக்கோரி கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.
