நிமிடங்களில் நிகழ்ந்த கொடூரம் ; லெபனான் சிறுவர்கள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்
லெபனான் முழுவதும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தீவிர வான்வழித் தாக்குதல்கள், அந்நாட்டு சிறுவர்கள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் (UNICEF) எச்சரித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் மாத்திரம், சில நிமிட இடைவெளியில் 33 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் 153 பேர் காயமடைந்துள்ளனர்.

இது மனிதாபிமானமற்ற ஒரு செயல் என அந்த அமைப்பு விபரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி முதல் லெபனானில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
இது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு புள்ளிவிபரமாகும். மேலும், லெபனான் முழுவதும் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் சுமார் 3,90,000 சிறுவர்கள் உள்ளடங்குவதுடன், அவர்கள் பலமுறை இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் இருந்து சிறுவர்கள் மீட்கப்படும் அதேவேளை, பலர் காணாமல் போயுள்ளனர்.
தமது உறவினர்களையும் வீடுகளையும் இழந்த சிறுவர்கள் பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லெபனானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், மனிதாபிமான உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சர்வதேச நாடுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.