ரஷ்யா தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!
ரஷ்யாவைவிட்டு வெளியேறும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கிடக்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய-ஜார்ஜியா எல்லையில் 20 கிலோமீற்றர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரில் ஈடுபடுத்த 300,000 வீரர்களை திரட்டும் உத்தரவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரஷ்ய பொலிசார் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான அடக்குமுறையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ஆண்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையிலேயே ரஷ்ய-ஜார்ஜியா எல்லையில் 20 கிலோமீற்றர் தொலைவுக்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் தொடர்பில் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நாட்டைவிட்டு எங்கேனும் வெளியேறும் பொருட்டு 40 முதல் 50 மணி நேரமாக காத்துக்கிடப்பதாக ரஷ்ய மக்கள் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஜார்ஜியா எல்லையில் மட்டுமின்றி, மங்கோலியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கியாக்ட் எல்லையிலும் இதே அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ரஷ்யாவில் இருந்து 260,000 ஆண்கள் நாட்டைவிட்டு சமீப நாட்களில் வெளியேறியுள்ளனர்.
புதன் மற்றும் சனிக்கிழமை இரவு வரை 261,000 ஆண்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதாக அரசு தரப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கை கண்டிப்பாக மிக அதிகமாக இருக்கவே வாய்ப்பு எனவும், அரசு தரப்பு கூறுவதை மொத்தமாக நம்ப முடியாது எனவும் கூறுகின்றனர்.
திங்களன்று, 8,000 க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் புடினின்(Vladimir Putin) கொள்கையிலிருந்து விடுபடும் முயற்சியில் பின்லாந்திற்கு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.