போர்க்களமாகும் கஜகஸ்தான் .... சுட்டுக்கொல்லுங்கள்...அதிரடி உத்தரவு பிறப்பித்த அதிபர்!
கஜகஸ்தானில் வாகன எரிபொருள் விலையை அந்த நாட்டு அரசு இரு மடங்காக உயர்த்தியதனை ஏற்க மறுத்த மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் இந்த போராட்டம் புரட்சியாக வெடித்து வன்முறையாக மாறியது. பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு பதவி விலகியது. போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நீடிப்பதுடன், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்த கலவரத்தின்போது 26 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்தனர். 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் பாதுகாப்பு படை தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சம் கூறி உள்ளது.
இதேவேளை கஜகஸ்தான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை நாடு சந்தித்தது இல்லை.
வெளிநாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாத கும்பல்கள் பிரச்சினையின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
அதோடு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளபோது அங்கு நிலைமையின் தீவிரம் குறையவில்லை.
இந்தநிலையில் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும், சுட்டுக் கொல்லவும் சட்ட அமலாக்க துறைக்கு அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்,
பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மீது கொடிய ஆயுதத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சரண் அடைய மறுப்பவர்கள் கொல்லப்படுவார்கள். பிற நாடுகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முட்டாள்தனம். குற்றவாளிகள், கொலைகாரர்களுடன் என்ன பேச்சுவார்த்தை வேண்டி கிடக்கிறது என அவர் ஆவேகமாக பேசியுள்ளார்.