தடயவியல் அறிக்கை கோபத்தையும் ஏமாற்றத்தையுமே அளித்துள்ளது... ஈரான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் குடும்பத்தையே இழந்த கனேடியர்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் விமானம் ஒன்று ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த கனடா விசாரணை அதிகாரிகள் தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அந்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாகவும், கோபத்தை ஏற்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதில் பயணித்த 176 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களில் 55 பேர் கனேடிய குடிமக்கள், 30 பேர் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள். விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ஒப்புக்கொண்டது.
ஆனால், கனேடிய சிறப்பு தடயவியல் குழு ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் இறங்கியது. விசாரணையின் முடிவில், ஈரான் திட்டமிட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கோ, ஈரான் அதிகாரிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதற்கோ ஆதாரம் இல்லை என அந்த குழு தெரிவித்துள்ளது.
தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள்தான் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன என்று கூறும் ஒன்ராறியோவில் வாழும் Alireza Ghandchi, நாங்கள் உண்மையான அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கிறோம் என்கிறார்.
Ghandchi, அந்த விமான விபத்தில் தனது மனைவி Faezeh, மகள் Dorsa (15), மகன் Daniel (8), என மொத்த குடும்பத்தையும் இழந்துவிட்டார். அன்று இரவு என்ன நடந்தது, யார் என்ன பேசிக்கொண்டார்கள், என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என அனைத்து விவரங்களும் எங்களுக்குத் தெரிந்தாகவேண்டும் என்கிறார் Ghandchi.
விபத்து நடந்து 17 மாதங்களுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, ஏற்கனவே எங்களுக்கு தெரிந்த பழைய விடயத்தையே கூறுகிறது, அதில் புதிதாக ஒன்றும் இல்லை என்கிறார் அவர். அந்த விமான விபத்தில் தன் தந்தையை பலிகொடுத்த Rehana Dhirani, அந்த அறிக்கையை தான் நிராகரிப்பதாக தெரிவிக்கிறார்.
அந்த அறிக்கை தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் வேதனையை குறைக்கவேண்டும். ஆனால், அது உருப்படியாக எந்த பதிலையும் கொடுக்கவில்லை என்கிறார் அவர்.
வலியும், துக்கமும், கோபமும், வெறுப்பும்தான் மனதில் மிஞ்சியிருக்கின்றன என்று கூறும் Rehana, இது ஏன் நடந்தது என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.
அந்த விமான விபத்தில், அல்லது தாக்குதலில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த அனைவரின் உணர்வும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.