ரெயில்வே பணிமனை அருகே பயங்கர துப்பாக்கிச்சூடு! 8 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவில் ரெயில்வே பணிமனை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன் ஜோஸ் நகரில் ரெயில்வே பணிமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த பணிமனை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு இன்று துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய முயற்சித்தனர்.
ஆனால், அந்த நபர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும், இந்த தாக்குதலில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து ரெயில்வே பணிமனை அருகே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.