பொதுமக்களை வெளியேற்றி வணிக வளாகத்தை அதிரடியாக மூடிய பொலிஸ்
ரொறன்ரோவில் யார்க்டேல் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, பொலிசார் அந்த வளாகத்தை மூடியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 3.40 மணியளவில், குறித்த வணிக வளாகத்திற்குள் பல முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், வணிக வளாக காவலர்களின் உதவியுடன் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர். மட்டுமின்றி, சம்பவப்பகுதியில் இருந்து துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், பாதிக்கப்பட்டவர் எவரையும் பொலிஸ் தரப்பால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், கூட்ட நெரிசலில் சிக்கிய மூதாட்டி ஒருவரை மீட்டு அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த வணிக வளாகத்தினுள் மொத்தமாக சோதனையிட்டு, பாதுகாப்பு உறுதி செய்த பின்னரே பொதுமக்களை அனுமதிக்க முடியும் என பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் யார்க்டேல் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.